Photo by Luis Tosta on Unsplash
அச்சம்.. மனிதனின் உணர்வுகளுள் அச்சம் என்பது, காதல்,காமம்,கருணை,பாசம் என்ற உணர்வுகளோடு ஒப்பிடுக்கையில் அதிகம் பேசு பொருளாகாத ஒன்றாகவே இருந்து வந்துள்ளது.அச்சம் என்பது மடமையடா என்றான் ஒரு கவிஞன்.அஞ்சுவது அஞ்சாமை பேதமை என்றார் தெய்வப் புலவர். என் அச்சங்கள் பற்றிக் கூறியிருக்கிறேன்... மடமையா,பேதமையா என்று இக்கட்டுரையை வாசிக்கும் நீங்களே தீர்மானியுங்கள்.
மூன்றாம் உலகப் போர் என்று ஒன்று வந்தால் அது நீரின் பொருட்டாகவே இரூக்கும் என்று கணித்திருக்கிறார்கள் . அது உண்மையாகிவிடுமோ என்றே அச்சம் தோன்றுகிறது எனக்கு. ஒன்று இயற்கையின் திருவிளையாடல்,மற்றது மனிதர்களின் அராஜகம்.
நீருக்கான முதன்மையான ஆதாரம் மழைப் பொழிவே ! அது பருவத்தே ,ஆண்டாள் பகன்றபடி ஆழியுள் புக்கு முகம் கொடார்த் தேறி ,ஊழி முதல்வன் உருவம் போல் மெய்கறுத்து ,,பத்மநாபன் கையில் ஆழி போல் மின்னி ,வலம்புரி போல் நின்றதிர்ந்து,தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை பெய்ய வேண்டும் .இயற்கையாய் நிகழும் காற்றின் மாறுபாட்டால் அவ்வாறு மழை பெய்து, ஆறு, குளம், குட்டை,ஏரி,வாய்க்கால்,கண்மாய் ,கிணறு என்று பூமியில் அதைத் தேக்கி வைத்து வருடம் முழுவதும் சீராக பயன்படுத்த வகை செய்து வைத்திருந்தனர். நம் முன்னோர்கள் . ஆனால் இன்றோ பருவத்தே மழை என்பதே அருகி விட்டது. காற்றின் மேலடுக்கு சுழற்சியால் மழை,வெப்ப சலனத்தால் மழை,காற்றழுத்த தாழ்வு நிலையால் மழை,மேக வெடிப்பால் மழை என்று காரணங்கள் மட்டுமல்லாது பெயர்களும் சொல்லிக் கொண்டு தன் விருப்பத்துக்கு கொட்டித் தீர்த்து விட்டுச் சென்று விடுகிறான் வருணன் .போதாக் குறைக்கு வான் பரப்பை மாசு படுத்தி வேதிப் பொருட்களைத் தூவி செயற்கை மழை வேறு..அந்த வேதிப்பொருட்களின் அதீத பயன்பாட்டால் கடந்த சில நாட்களுக்கு முன் பாலைவன பூமியான அரபு நாட்டில் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்திய அதிகனமழை பற்றிய செய்தியும் இங்கே குறிப்பிடப் படவேண்டிய ஒன்று.
இயற்கையாய் மழை பொழிய காடுகளும் அவற்றில் மரங்களும் மிக மிக அவசியம்.மக்களின் பயன்பாட்டுக்கு மரங்கள் வெட்டப்படுவது ,சிறிய அளவில் இருந்தது,அது,தொடர் கதையாக நீண்டு கொண்டிருக்கிறது..இன்று.. நகர மயமாக்கல் என்ற பெயரில் மரங்களையும் காடுகளையும் அழித்து,பெரும் கட்டிடங்கள், பாலங்கள் என்றமைத்து காடுகளின் பரப்பளவைக் கணிசமாகக் குறைத்து விட்டோம். இதனால் பாதிக்கப்படுவது மனிதன் மட்டுமல்ல,வனம் வாழ் உயிரினங்களும் தான். தற்போது யானை,கரடி,புலி,பாம்பு போன்ற விலங்குகள் ஊருக்குள் வந்து உலவுவதாக செய்திகளில் வருவதன் காரணம் இதுவன்றோ?பல்லுயிர்ப் பெருக்கம் பாதிக்கப்படுவது கண்ணுக்குத் தெரியாத இழப்பு.
இவை தவிர,காடுகள் அழிய வனத்தில் ஏற்படும் நெருப்பும் ஒரு காரணமாகிறது. தொடர்ந்து ஏற்படும் மழையின்மையால், வறட்சியால்
மரங்கள் ஒன்றை ஒன்று உரசி நெருப்பு பற்றிக் கொண்டு அணைக்கவே இயலாத பெருநெருப்பாகி பெரும் வனப்பரப்பு சிதைந்து போகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகளில் அடிக்கடி நடக்கும் இந்நிகழ்வு, சென்ற ஆண்டு பூமியின் நுரையீரல் என்று கருதப்படும் அமேசான் காடுகளிலும், பிரேசில் மற்றும் மெக்ஸிகன் காடுகளிலும் பல நாட்கள் நெருப்பை அணைக்க முடியாமல் போனது பெரும் சோகம்.
சரி,கீழே விழுந்த நீரை சரிவர சேமிக்கிறோமா என்பதே கேள்விக் குறி. இல்லை என்பதே உண்மை. எதிலும் அடுத்தவர்களைப் பார்த்து வாய் பிளக்கும் நம்மவர்கள் சிலவற்றை கண்டுகொள்ளாமல் கற்றுக் கொள்ளாமல் இருந்து விடுகிறார்கள். பெருந்துயரம் தந்து கொண்டிருந்த மஞ்சள் ஆற்றை சீனர்கள் இன்று வரம் தரும் நதியாக்கி,தங்கள் பூமியை வளம் கொழிக்கும் பூமியாக்கி விட்டார்கள்.
கொஞ்சமே கொஞ்சம் நீர் வளம் கொண்ட இஸ்ரேல் நாட்டு மக்கள் , சொட்டு நீர் பாசனம் கொண்டு தங்களை மேம்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். நம் நாட்டில், ஜீவ நதிகள் ஓடும் இடங்களில் கூட அத்தியாவசியத் தேவையான குடிநீருக்கும் கடும் பஞ்சம்! பொறுப்பற்ற நீர் மேலாண்மையே காரணம் அன்றி வேறென்னவாக இருக்க முடியும்.
பொறுப்பற்ற நீர் மேலாண்மை என்ற கடுஞ்சொல் கூட நான் உதிர்த்தது அல்ல. பல ஆண்டுகளுக்கு முன் படித்த பத்திரிக்கைச் செய்தி என் நினைவில் பசுமையாய் நிற்கிறது. கண் முன்னே காணும் நீர்நிலைகளின் அவலநிலை மறக்கவிடாமல் செய்துகொண்டிருக்கிறது.அது என்ன என்கிறீர்களா?
ராஜஸ்தான் மாநிலம் பாலைவன பூமி என்பது யாவரும் அறிந்தது தான். அங்கு வறட்சியைத் தாங்கி நிற்கும் பயிர் வகைகளைப் பயிரிட்டு, விவசாயிகள் பயிர் செய்யும் விதத்தை க் கற்றுக் குடுக்க வந்தார் அந்த மாநிலத்தைச் சேர்ந்த ராஜேந்திர சிங் என்ற விவசாயி. அவர் நம் தமிழக நீர் வளங்களை ஆராய்ந்து விட்டு சொன்னது தான் பொறுப்பற்ற நீர் மேலாண்மை என்ற குற்றச்சாட்டு . ஆண்டுகள் பல ஆனாலும் நம் நிலை மாறவில்லை என்றே கூறவேண்டும்.
தொழில் நுட்பங்கள் வளர்ச்சி பெறாத கால கட்டங்களில் கூட சீறிப் பாயும் வெள்ளத்தை, அணை கட்டித் தேக்கி,அதில் மிகும் நீரை வாய்க்கால் வழிசெலுத்தி ,குளங்களில் நிரப்பி குட்டைகளில் தேக்கி,நிலத்தடி நீரைப் புதையலாக்கி பூமியையும் அதன் மூலம் மானுடத்தையும் செழிப்பாக்கி நமக்குத் தந்து விட்டுச் சென்றிருக்கின்றனர் நம் முன்னோர்கள் பழந்தமிழ் நூல்கள் சான்று பகர்கின்றன. வள்ளுவப் பெருந்தகை வான் சிறப்பு என்று ஒரு அதிகாரத்தையே படைத்திருக்கிறார் . .
ஆனால்,இன்றைய இந்நிலைக்கு அரசு தான் காரணம் என்று மக்களும்,மக்கள் தான் காரணம் என்று அரசுகளும் ஒருவரை ஒருவர் சுட்டு விரல் நீட்டி,குற்றம் சாட்டிக் கொண்டிருப்பதில எவ்வித நியாயமும் இல்லை.. ஒவ்வொரு தனி மனிதனும்,அவனைத் தவறிழைக்க அனுமதித்த ,தண்டிக்க மறந்த அரசாங்கமும் தான் காரணம். என்பதை உணர வேண்டிய காலகட்டத்தில் தான் நாம் இருக்கிறோம் என்றால் மிகையில்லை. இனியும் தாமதித்தால் நம் வருங்கால சந்ததியினருக்கு நீரற்ற பூமியைத் தான் விட்டுச் செல்ல வேண்டிய அவல நிலை ஏற்படும்.இது தான் என் அச்சம். உனக்கு வேறு கவலைகளே இல்லையா/ என்று என்னை ஏளனம் செய்பவர்கள் உண்டு. சமுதாயத்தின் ஓர் அங்கமாகிவிட்ட படியால் இது நியாயம் என்றே எண்ணுகிறேன்। நீரின்றி அமையாது உலகு அல்லவா?காலம் கடந்து விடவில்லை.
.. இப்போதாவது விழித்துக் கொள்ள வேண்டும். அதனால் பல பேரிடர்களைத் தவிர்க்கலாம் என்பது சமூக ஆர்வலர்கள் கருத்து. இனி தீர்வுகள் பற்றிக் காணலாம்.
வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம் என்ற பாரதியின் கனவு ஒரு புறம் இருக்கட்டும். கிடைக்கும் நீரை வீணாக்காமல் எவ்வாறு பாதுகாத்து பயன் படுத்துவது என்பது தான் நம் முன் நிற்கும் சவால்..
முன்னோர் வழி நின்று நீரை தேக்கி வைத்தல் மட்டும் நீர் மேலாண்மை ஆகிவிடாது. நமக்குக் கிடைக்கும் நீர் வளங்களின் பயன்பாட்டை உகந்த வாறு திட்டமிடுதல் அவசியம்.,அதனை மேம்பட்ட வகையில் நிர்வகித்து,விநியோகம் செய்தல் வேண்டும் . நிலத்துக்கும் மக்கள் பயன்பாட்டுக்கும் மட்டுமல்ல கடலுக்குள் செல்லவும் திட்டமிட வேண்டும்.
மழை நீர் செல்லாவிட்டால் நெடுங்கடலும் தான் நீர்மை குன்றும் என்றார் வள்ளுவரும். மேலும்,அப்பொழுது தான் நீர் ஆவியாதல் நடந்து மேகத்துக்கு நீராதாரம் செல்லும் என்பது அறிவியல் அல்லவா?
மழைப் பொழிவிற்கு முழு முதல் காரணம் மலைவளமும் ,அங்கிருக்கும் மரங்களும் . காடுகளையும் ,மரங்களையும் அழித்து விட்டு மழை எதிர்பார்த்தால் ,கர்ப்பப் பையை இழந்தவளிடம் குழந்தை பெறச் சொல்வது போலத் தான். அதனால் மரங்கள் வெட்டப் படுவது கட்டாயம் தவிர்க்கப் பட வேண்டிய ஒன்றாகும். இங்கிலாந்தில் சாலை விரிவாக்கம் செய்யும் போது மரங்கள் குறிக்கிட்டால் அதை வெட்டி வீ ழ்த்தாமல் பாதுகாக்கிறார்கள். . அதற்காக பயண தூரமோ நேரமோ அதிகமானால் அதனைப் பொருட்படுத்துவதில்லை.
மழை பொழிந்து, நதி நிறைந்து ஓட, தடைகள் தகர்க்கப் பட வேண்டும்। கரையோர ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்பட வேண்டும். அனைத்திலும் முக்கியமான ஒன்று நதி நீர் மாசுபடுவதைத் தடுத்தாக வேண்டும். வாழ்வின் ஆதாரமான நதிகளில் கழிவுகள் கொட்டப் படுவது முற்றிலும் ஒழிக்கப் படவேண்டும். மனிதக் கழிவுகள் ஒருபுறம் இருக்க ஆலைக் கழிவுகள் பெரும் கேட்டை விளைவிக்கிறது. நம் கண் முன் காண்பது கூவம் ஆற்றின் நிலை. பலரும் அறியாதது நொய்யல் மற்றும் பவானி ஆறுகளின் நிலை. சாயப் பட்டறை கழிவுகளால் பயன்படுத்த முடியாத நிலைக்குப் போனது யார் செய்த தவறு?இன்னும் பெயர் தெரியாத எத்தனையோ சிறு ஆறுகள் சா க்கடையாய் மாறிப் போன அவலம் பல உண்டு.
இதை எழுதும் போது இரண்டு விஷயங்கள் என் மனதில் தோன்றுகிறது. ஒன்று இங்கிலாந்தில் நெசவு ஆலைகளை மூடி நூறாண்டுகளுக்கு மேல் ஆகிறதாம் . நெசவாலைக்கழிவுகளால் நீர்நிலைகள் மாசு படுவதைத் தடுக்கவும் ,உற்பத்தியின் போது செலவாகும் நீரை சேமிக்கவும் தானாம். துணிமணிகளை இறக்குமதி செய்து தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.
மற்றொன்று நம் இந்தியாவின் பெருமை.பல ஆண்டுகளுக்கு முன் பத்திரிக்கையில் படித்து என் மனதை விட்டு அகலாமல் இருப்பது. பஞ்சாப் மாநிலத்தில் நடந்த உண்மை நிகழ்வு. அங்கு வாழ்ந்த சீக்கியத் துறவி ஒருவர் நதி ஒன்று மாசுபடுவதைப் பொறுக்க மாட்டாமல் தானே சுத்தப் படுத்தும் முயற்சியைத் துவங்கினாராம். அதன் பின் பொது மக்களும் ,பொதுநல அமைப்புகளும் அவருக்கு உறுதுணையாக செயல்பட்டு அழிவின் விழிம்பில் இருந்து அந்த நதியை மீட்டெடுத்தனர் என்பதே அந்தச் செய்தி..
அதற்கு முதலில் ஆற்றில் சேர்க்கப் படும் கழிவுகள் தடுக்கப்பட வேண்டும். திடக் கழிவுகளும் மனிதக் கழிவுகளும் கட்டாயம் தடை செய்யப் பட வேண்டும். ஏனெனில் அவை கழி முகத்தில் கடலில் சேரும் போது சுற்றுப் புறத்துக்கு கடும் தீங்கு விளைவிப்பதோடு கடல் வாழ் உயிர்களுக்கும் சொல்லொணா கேடுகளை உண்டாக்கும்.
உலகில் எந்த நாட்டிலும் எந்த சமயத்திலும் இல்லாத ஒரு உயர்ந்த பண்பாடு நம் பாரத தேசத்தில் உள்ளது. அது நதிகளை தெய்வமாகவும்,புனிதமானதாகவும் கருதுவது. அதுவே நதிகள் மாசு படுவதற்கும் காரணமாகிறது.நதி அன்னைக்கு சமர்ப்பணம் என்ற பெயரில் நதி மாசு படுத்தப் படுகிறது. புனித நீராடலுக்கான விழாக்கள் நடக்கும் போது கேட்கவே வேண்டாம். நீர் நிலைகளை சுத்தப் படுத்தும் தொழில்நுட்பங்களும் இயந்திரங்களும் வந்துவிட்ட இந்நாட்களில் அதைப் பயன்படுத்த தடை என்ன இருக்கிறது.?
நீரோட்டம் தங்கு தடையின்றி செல்லவும்,நிலத்தடி நீர் மட்டம் உயரவும் மணற்கொள்ளை தடுக்கப்படவேண்டும்.
கழிவு நீர் முறையாக வெளியேற்றப் பட வேண்டும். அவை சுத்திரிக்கப் பட்டு,பயன் பாட்டுக்கு எடுத்துக் கொள்ளலாம். மறுசுழற்சி முறையில் சூத்திகரிக்கப்பட்ட நீரை,ஆலை மற்றும் வீட்டு உபயோக்கத்திற்குப் பயன்படுத்தும் நாடுகளும் உண்டு।
நம் நாடு விவசாயத்தைப் பிரதானமாக உடைய நாடு. அதனால் அதனைக் கருத்தில் கொண்டு,நீர்ப் பாசன முறைகளை சீரமைத்துக் கொள்ளுதல் மிகவும் அவசியமான ஒன்றாகிறது.விவசாயம் செழிக்க ,வான்தரும் அமுதமாகிய மழைநீர்,அது பாயும் ஆற்றுநீர்,அது சேமித்துக் கொடுக்கும் ஊற்றுநீர் மூன்றும் வளமையானதாக இருத்தல் அவசியம். குறிப்பிட்ட கால அளவுகளில் நீர் நிலைகளைத் தூர் வாருதல் இன்றியமையாத ஒன்றாகும்.அதனால் அதிகளவு நீர் சேமிக்கப் பட்டு சுற்றுப் புறங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். விளை நிலங்கள் காங்கரிட் காடுகள் ஆனதின் முழுமுதல் காரணம் நீர்நிலைகளின் அவல நிலைகளே . அவை மேம்படுத்தப் பட்டால் குடிநீர் ஆதாரங்கள் மேம்படும்.அதனால் குடிநீர்ப் பிரச்சனையும் தீர்க்கப்படும்। ஒவ்வொரு தனி மனிதனும் நீர் சிக்கனம் பற்றிய விழிப்புணர்வு அறிந்திருத்தல் வேண்டும் என்பது இன்றைய அவசியத் தேவை.
கடல்நீரால் இந்த பூமிப்பந்து சூழப்பட்டிருந்தாலும் ,பூமியின் மேற்பரப்பில் 70 % நீர் தான் காணப்படுகிறது.. அதிலும் 1% நீரே குடி தண்ணீர் என்கிறது தரவுகள்.விலை மதிப்பற்ற இயற்கை வளமாகிய தண்ணீரைஎப்படிப் பாதுகாக்கப் போகிறோம்?இருபுனலும் வாய்த்த மலையும்,வருபுனலும் வரமாய்,வளமாய் நிறைசெல்வமாய் அமைந்த இந்த நாட்டை அடுத்த தலைமுறையினருக்கு எவ்வாறு தரப் போகிறோம்.?
ஒரு தனி மனிதனாய் சரி செய்யமுடியாத பிரச்சனை என்றாலும் ஆபத்து என்று உணர்ந்து அறைகூவல் விடுக்க முனைந்துள்ளேன். என் முயற்சி பலிக்குமா?என் அச்சம் தீருமா? விலகுமா?